0
 ராஜபக்சே அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் விலகியதை அடுத்து அவரது அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக ராஜபக்சே போட்டியிட உள்ளார். இந்நிலையில், அவரது அமைச்சரவையில் இருந்து தமிழகக் கட்சிகளைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.

ராஜபக்சே அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த மைத்ரிபால சிறியசேனா ஏற்கனவே, கடந்த மாதம் 21 ஆம் தேதி அரசில் இருந்து விலகினார். மேலும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகவும் அவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ராஜபக்சே அமைச்சரவையில் இணையமைச்சர்களாக இருந்த, இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான கட்சிகளைச் சேர்ந்த பழனி திகம்பரம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களின் பதவியை நேற்று ராஜிநாமா செய்தனர்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை ராஜபக்சே நிறைவேற்றத் தவறிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், மைத்ரிபால சிறியசேனாவை அவர்கள் ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.


தேசிய ஐக்கிய தொழிலாளர் கட்சி, மக்கள் முன்னணி கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களின் விலகலால், இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை ராஜபக்சேவின் அரசு இழந்துள்ளது.

Post a Comment

 
Top