0
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சோனாக்‌ஷி, அனுஷ்கா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘லிங்கா’ திரைப்படம் ரஜினி பிறந்த நாளான நாளை (டிசம்பர் 12) வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் கதை தன்னுடையது என்று ரவிரத்னம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார். இவ்வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது ரவிரத்னம் தரப்பில், ‘லிங்கா’ கதை தன்னுடையது என்று வாதாடப்பட்டது.

இதையடுத்து, ரூ.10 கோடி வைப்புத் தொகை செலுத்திவிட்டு, படத்தை நாளை வெளியிடலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து, படம் நாளை வெளியாக இருப்பதால் ரூ.10 கோடி வைப்புத் தொகை செலுத்துதல் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், ரூ.10 கோடிக்கு பதிலாக ரூ.3 கோடி முதலில் செலுத்திவிட்டு, படத்தை வெளியிடலாம் என்றும், இதர ரூ.2 கோடி மற்றும் ரூ.5 கோடி வங்கி உத்தரவாத்தை திங்கட்கிழமைக்குள் செலுத்தலாம் என்றும் அவகாசம் அளித்துள்ளது.

ஆக, ‘லிங்கா’ படத்தின் கதை யாருடையது என்ற சர்ச்சை, ‘லிங்கா’ படத்தின் வெளியீட்டோடு முடிந்துவிடாது, அதன்பிறகும் சட்டப் போராட்டம் தொடரும் என்பதைத் தான், உயர்நீதிமன்ற மதுரை கிளை செலுத்த சொல்லியிருக்கும் ரூ.10கோடி டெபாசிட் விவகாரம் உணர்த்துகிறது.

இப்படியாக, மாபெரும் சிக்கல் தொடர்ந்த வண்ணம் இருக்க, நாளை திரைக்கு வருகிறது ரஜினியின் ‘லிங்கா’.

Post a Comment

 
Top