0
பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்ப‌டங்களுக்கான பிரிவில் ‘பண்ணையாரும் பத்மினியும்' படத்துக்கு விருது கிடைத்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரைப் படத்துக்கு கர்நாடக அரசின் விருது கிடைத்துள்ளது.

கர்நாடக சலனசித்ராவின் 7-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா கடந்த 4ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற்றது.

பெங்களூரு திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘பண்ணையாரும் பத்மினியும்’

170 திரைப்படங்கள்

44 நாடுகளைச் சேர்ந்த 170 திரைப்படங்கள் 10 திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இதில் எஸ்.யூ.அருண்குமார் இயக்கிய `பண்ணையாரும் பத்மினியும்', ஜி.பிரம்மா இயக்கிய `குற்றம் கடிதல்' ஆகிய இரு தமிழ் திரைப் படங்களும் திரையிடப்பட்டன. இரு படங்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது.

3 படங்கள் விருதுக்கு தேர்வு

இந்நிலையில் தேர்வான திரைப்படங்களில் சிறந்த கன்னட திரைப்படம், இந்திய திரைப்படம், ஆசிய திரைப்படம், உலக திரைப் படம் ஆகிய‌ பிரிவுகளில் தலா 3 சிறந்த திரைப்படங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன‌.

பண்ணையாரும் பத்மினியும்

இதன் நிறைவு விழா கடந்த வியாழக்கிழமை இரவு பெங்களூருவில் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா தலைமையில் நடைபெற்றது. கன்னட திரைப் படப் பிரிவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட `பிரக்குருதி', `ஆகாசி பார்லர்', `ஹஜ்' படங்களின் இயக்குநர்களுக்கு விருதும், தலா ஒரு லட்சம் பரிசும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து இந்திய திரைப்படங்களுக்கான பிரிவில் `அன் டூ டஸ்க் (மலையாளம்), எல்லோ (மராத்தி) மற்றும் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த `பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இயக்குநர் எஸ்.யூ.அருண்குமாருக்கு விருதும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இயக்குநர் மகிழ்ச்சி

பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் செக் குடியரசு, டெல்லி உள்ளிட்ட 6 திரைப்பட விழாக்களில் பலருடைய பாராட்டுகளை பெற்றது. இந்த திரைப்படத்துக்கு பெங்களூரு திரைப்பட விழாவில் விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top