0
எகிப்தியர்களிடம் ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு கிடக்கும் இஸ்ரேல் மக்களை புரட்சியாளன் ஒருவன் கடவுளின் வழிகாட்டுதலுடன் மீட்டெடுத்து வருவதே எக்சோடஸ் காட்ஸ் அன்ட் கிங்ஸ் படத்தின் முழு கதையாகும்.

இஸ்ரேல் மக்கள், எகிப்து பாரோ மன்னரிடம் அடிமைப்பட்டு கிடக்கின்றனர். மன்னருக்கு ராம்சீஸ் என்ற மகன் இருக்கிறான். இவரும் மோர்சே என்ற தளபதியும் சிறுவயது முதலே நண்பர்களாக பழகி வருகின்றனர். மன்னருக்கு ரொம்பவும் விசுவாசியாக நடந்துகொள்கிறான் மோர்சே.

இந்நிலையில், அடிமைகள் புரட்சி செய்ய முடிவெடுத்திருப்பதாக, அரசு பிரதிநிதியிடமிருந்து மன்னருக்கு தகவல் வருகிறது. அதை சரிசெய்ய மோர்சே, அடிமைகள் பணிசெய்து கொண்டிருக்கும் பீதோம் என்ற இடத்திற்கு வருகிறான். அங்கு அடிமைகளிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறான்.

அப்போது மோர்சேவிடம், அடிமைகளில் மூத்தவரான ஒருவர் மோர்சேவும் தன் இனத்தவர்கள்தான் என்று கூறுகிறார்.  மோர்சே இஸ்ரேலை சேர்ந்தவன்தான் என்பதை அவனுக்கு ஆதாரப்பூர்வமாக விளக்கும் அந்த பெரியவரின் பேச்சை ஏற்க மறுக்கிறான் மோர்சே. அடிமைகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, மோர்சே எகிப்து திரும்பியதும், மன்னர் நோய்வாய் படுக்கையில் இருந்து இறந்துபோகிறார். இதன்பிறகு மன்னராக ராம்சீஸ் பதவியேற்றுக் கொள்கிறான்.

ராம்சீஸ் பதவியேற்றதும் அவனுள் தலைக்கணம் ஏற்படுகிறது. ஒருநாள் மோர்சே, இஸ்ரேலைச் சேர்ந்தவன் என்று ராம்சீஸுக்கு தெரிய வருகிறது. இதனால், அவனை கொல்ல பலர் வற்புறுத்தியும், அதை ஏற்க மறுக்காமல் மோர்சேவை நாடு கடத்துகிறான். நாடு கடத்தப்படும் மோர்சே பாலைவனத்தில் சுற்றித்திரிந்து கடைசியில் ஒரு கிராமத்தை அடைகிறான். அங்குள்ளவர்கள் அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள். அங்கு நாயகியை பார்க்கும் மோர்சே அவள்மீது காதல் வயப்பட்டு அவளை மணமுடிக்கிறான்.

கிட்டத்தட்ட 9 வருடங்கள் அங்கேயே தங்கி, ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறான் மோர்சே. இந்நிலையில், எகிப்து மன்னான ராம்சீஸ், அடிமைகளை மிகவும் கொடூரமாக நடத்துகிறான். இதனால் நாளுக்கு நாள் அடிமைகளின் சாவு அதிகமாகிக் கொண்டே போகிறது.

ஒருநாள் மோர்சே மலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு அடிபடுகிறான். அப்போது, அவன் முன்னாள் கடவுள் தோன்றி ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு கிடக்கும் மக்களை மீட்டெடுக்க ஒரு தளபதியாக செல்லவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். ஆனால், கடவுள் நம்பிக்கை அற்ற மோர்சே இதை நம்ப மறுக்கிறான். ஆனால், அடுத்தடுத்து நடக்கும் சில சம்பவங்கள் அவனை கடவுள் இருக்கிறார் என்று நம்ப வைக்கிறது.

கடைசியாக தனது குடும்பத்தை பிரிந்து, அடிமைப்பட்டு கிடக்கும் தன் நாட்டு மக்களை மீட்க எகிப்து நோக்கி பயணப்படுகிறான் மோர்சே. இறுதியில், அந்த அடிமைகளை மோர்சே மீட்டு வந்தாரா? அவர்களை மீட்க கடவுள் மோர்சேவுக்கு எவ்வாறு உதவினார்? என்பதே மீதிக்கதை.

கிறிஸ்தவர்களின் வேதநூலாகிய பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் ‘யாத்திராகமம்’ என்ற பகுதியில் இடம்பெற்ற புரட்சியாளன் மோர்சேயின் வாழ்க்கைக் கதையை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ரிட்லி ஸ்காட். கிறிஸ்டியன் பேல், மோர்சே கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வெவ்வெறு காலகட்டங்களில் இவரது நடிப்பும், தோற்றமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

ராம்சீஸ் மன்னராக நடித்திருக்கும் ஜோயல் எட்கேர்டன் மொட்டைத் தலையுடன் வில்லத்தனம் காட்டியிருக்கிறார். 1300 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் அத்தனையையும் அழகாக தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர் ரிட்லி ஸ்காட். அந்த காலத்தில் ராஜாக்கள், தளபதிகள், போர்வீரர்கள் அணிந்திருந்த ஆடை, அணிகலன்களைப் போலவே வடிவமைத்து பிரமிப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.

அதேபோல், போர் காட்சிகளும் மிகப்பிரம்மாண்டமாக இருக்கிறது. கடைசி அரை மணி நேர காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம். புயல் போல் வரும் வெட்டிப் பூச்சிகள், முதலைகள் நைல் நதியை நாசமாக்கும் காட்சிகள், ஊருக்குள் தவளைகள் புகும் காட்சி, செங்கடல் நீரோடையாக பிரிந்து வழிவிடும் காட்சிகள் அனைத்தும் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. இருப்பினும் ஒருசில காட்சிகள் எந்தவித பிரம்மாண்டமும் இல்லாமல் வெறுமனே நகர்வது சற்று போரடிக்கிறது.

மொத்தத்தில் ‘எக்சோடஸ் காட்ஸ் அன்ட் கிங்ஸ்’ மாற்றம் தேவை.

Post a Comment

 
Top