0
நல்ல குடும்பத்தில் பிறந்த வெங்கட்ரமணன், தனது மனைவி மதுமிதா மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் குடிக்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். இவர் வேலைக்கு செல்லாததால் இவருடைய மனைவி மதுமிதா குழந்தைகள் படிக்க வைக்கவும், குடும்பத்தை வழி நடத்தவும் பணம் தேவைப்படுவதால் வேலைக்கு செல்கிறார்.

வெங்கட் ரமணன் 24 மணிநேரமும் குடித்துக் கொண்டே இருக்கிறார். இதனால் வீட்டில் சண்டை ஏற்படுகிறது. மதுமிதா குடிப்பதை நிறுத்துகள் என்று வெங்கட்ரமணனிடம் கூறுகிறாள். ஆனால் இவர் மறுக்கிறார். சபரி மலைக்கு மாலை போடுங்கள், 40 நாட்கள் விரதம் இருந்தால் குடியை மறந்துவிடலாம் என்று கூறுகிறார். முதலில் மறுக்கும் வெங்கட்ரமணன் பிறகு மாலை போடுகிறார்.

பிறகு குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்து அவர்களுடன் நேரத்தை கழித்து வருகிறார். சிறிது நேரம் ஆனவுடன் அவருக்கு மது ஞாபகம் வருகிறது. மாலை போட்டிருப்பதால் குடிக்க முடியாமல் தவிக்கிறார். பிறகு அவருக்கு கைகள் நடுங்க ஆரம்பிக்கிறது. குடிப்பதை கட்டுப்படுத்த முடியாமல் மாலையை கழட்டி விட்டு பிள்ளைகள் கண்முன்னே மீண்டும் குடிக்க ஆரம்பிக்கிறார். இதனால் வேதனைபடும் மதுமிதா தெய்வ குற்றம் ஆகிவிடும் குடிக்காதீர்கள் என்று கூற, அதற்கு அவர் என்னால் குடிக்காமல் இருக்க முடியவில்லை என்று கூறுகிறார்.

குடிப்பழக்கத்திற்கு மிகவும் அடிமையான இவர் குடியால் வேலையை இழக்கிறார். குடிப்பதற்கு மதுமிதாவிடம் பணம் கேட்கிறார். இவர் தரமறுப்பதால் மதுபானக் கடைக்கு வருபவர்களிடம் பணம் கேட்க ஆரம்பிக்கிறார். அவர்களும் தர மறுப்பதால் திருட ஆரம்பிக்கிறார். அளவிற்கு மீறி குடித்து ஒருநாள் குப்பையில் விழுந்து கிடக்கிறார். இவரை மனைவி மற்றும் குழந்தைகள் அங்கு சென்று வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள்.

நினைவு திரும்பியதும் மீண்டும் குடிக்க செல்கிறார் வெங்கட்ரமணன். அவரை தடுத்து வீட்டிலேயே குடிக்க வைக்கிறார் மதுமிதா. வீட்டில் குடிக்கும் வெங்கட்ரமணன் குடித்துவிட்டு கலாட்டா செய்கிறார். மேலும் மதுமிதாவை அழைத்து அவரை குடிக்க கட்டாயப் படுத்துகிறார். இதற்கு பணியாத மதுமிதா, வெங்கட்ரமணனை விட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

மனைவி குழந்தைகள் தன்னை விட்டு பிரிந்து சென்றதால், குடியை மறந்து குடும்பத்தினருடன் வெங்கட்ரமணன் இணைந்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் வெங்கட்ரமணன் சிறந்த குடிமகனாக வலம் வருகிறார். இவரே இப்படத்தை இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறார். குடிகாரன் கதாபாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்திருக்கிறது. குடித்துவிட்டு இவர் செய்யும் சேட்டைகள் ரசிக்க வைக்கிறது. ஆனால் படம் முழுக்க குடித்துக் கொண்டே இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.

குடி என்பது ஒரு நோய் அதை குணமாக்கலாம். ஒருவன் அளவிற்கு மீறி குடித்தால் குடும்பத்தில் மற்றும் சமுதாயத்தில் ஏற்படும் விளைவுகள் என்ற கருத்தை சொல்ல வந்த இவரை பாராட்டலாம். ஆனால் படம் பார்க்கும் பொழுது, குறும்படம் மற்றும் நெடுந்தொடர் பார்த்தது போல் தோன்றுகிறது. படத்தின் இயக்குனர் வெங்கட்ரமணன் பல தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியதாலும் பல ஆவணப்படங்களை இயக்கியதாலும் இப்படத்தையும் அப்படியே இயக்கியிருக்கிறார்.

படம் முழுக்க இவரே அதிக காட்சிகளில் வருகிறார். மேலும் சில கதாபாத்திரங்களை அமைத்து திரைக்கதையில் கூடுதல் கொஞ்சம் சுவாரஸ்யமாக அமைத்திருந்தால் ரசித்திருக்கலாம். இவருக்கு மனைவியாக வரும் மதுமிதா சிறப்பாக நடித்திருக்கிறார். குடிகாரனுக்கு மனைவியாக அமைந்தால் ஏற்படும் இன்னல்களை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். குழந்தைகளாக நடித்திருப்பவர்கள் சொன்ன வேலையை செய்திருக்கிறார்கள்.

கண்ணனின் இசையில் கானா பாலா பாடிய பாடல் மட்டும் குத்தாட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை பெரியதாக அமையவில்லை. வேதா செல்வத்தின் ஒளிப்பதிவில் தெளிவு இல்லாமல் இருக்கிறது. குறும்படத்திற்குண்டான ஒளிப்பதிவையே அமைத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘அப்பா வேணாம்ப்பா’ அய்யோ முடியலப்பா.

Post a Comment

 
Top