0
‘கண்கள் இரண்டால்…’ பாடல் மூலம் தமிழக மக்களின் கண்களையெல்லாம் தன் பக்கம் திருப்பியவர் ஜேம்ஸ் வசந்தன். கங்கை அமரனுக்கு பிறகு வளவள பேச்சும், கலகல இசையுமாக கவர்ந்தவர் ஒருவர் உண்டென்றால் அது ஜேம்ஸ்தான். சன் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக அறியப்பட்டவரான இவர், அவ்வளவு பெரிய மியூசிக் டைரக்டர் ஆனது எப்படி? இசைக்கும் இவருக்குமான தொடர்பு என்ன? என்பதெல்லாம் இப்போதைக்கு விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. ஏனென்றால் முதல் படத்திலேயே ஹிட் மியூசிக் டைரக்டராக முத்திரை குத்தப்பட்டுவிட்டார் அவர். அதற்கப்புறம் வந்த பசங்க, ஈசன் உள்ளிட்ட படங்கள் அவருக்கான இடத்தை உறுதி செய்தது.

அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார் அவர். வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக பிரமோஷன்.

இந்த படத்தில் 11 புதுமுகங்களை நடிக்க வைத்திருக்கிறார். அவர்கள் அத்தனை பேரும் வெவ்வேறு கல்லூரிகளில், வெவ்வேறு துறைகளில் படித்து வருபவர்கள்! இசை சம்பந்தமான படம் என்பதால்இப்படத்தில் நடிக்கும் அத்தனை பேருக்கும் நடிப்புடன் பாடும் திறனும் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படிப்பட்டவர்களையே தேர்வு செய்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

வானவில் வாழ்க்கை ஒரு நிமிட பாடல், இரண்டு நிமிட பாடல், நான்கு நிமிட பாடல் என மொத்தம் 17 பாடல்களை வைத்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். படத்தில் நடித்துள்ளவர்களையே அப்பாடல்களை பாடவும் வைத்துள்ளார். ‘வானவில் வாழ்க்கை’ படத்திலுள்ள மொத்தம் 17 பாடல்களில் 9 பாடல்களை ஜேம்ஸ் வசந்தனே எழுதியிருக்கிறார். சரி…இசையமைப்பாளராக வாழ்க்கை நல்லாத்தானே போய்க்கொண்டிருக்கிறது. பிறகு என்னத்துக்கு இந்த வேலை எல்லாம்?

‘‘நான் திருச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எதிர்காலத்தில் ஒரு இசைப் படம் இயக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதைத்தான் இப்போது நனவாக்கியிருக்கிறேன்’’ என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

முன்பெல்லாம் சில படங்களில் ‘இது ஒரு இன்னிசை மழை’ என்று டைட்டிலிலேயே அறிவித்துவிடுவார்கள். வானவில் வாழ்க்கையிலும் அப்படியொரு அறிவிப்பு வந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Post a Comment

 
Top