0
ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் குறித்து அவதூறாகவும், வேண்டுமென்றே எதிர்மறையாகவும் கேலி செய்து கருத்திடுவோர் மீது நடவடிக்கை கோரி தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதன் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் மற்றும் இணைய தளங்களை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்துள்ள கமிஷனர் அலுவலக சைபர் க்ரைம் பிரிவு, அத்தகைய கருத்துக்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லிங்கா படம் டிசம்பர் 12-ம் தேதி வெளியாகி, உலகெங்கும் பெரும் வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழகம் மட்டுமல்லாது பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நல்ல வசூலைக் குவித்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் லிங்காவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் இணையத்தில் சிலர் விஷமத்தனமாக படம் குறித்து கேலி கிண்டல் கருத்துக்களை எழுதியும், மோசமான படங்களை வெளியிட்டும் வருகின்றனர்.

இது படம் குறித்த எதிர்மறைப் பிரச்சாரமாக அமைந்திருப்பதாகவும், திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான விஷயங்கள் என்றும் கூறி, இவற்றைத் தடுக்க சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் படக்குழுவினர் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து பேஸ்புக்கில் லிங்காவுக்கு எதிராக விஷமத்தனமாக எழுதப்பட்ட பக்கங்களை நீக்கவும், அத்தகைய நபர்களைப் பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 இணைய தளங்களில் விமரிசனங்களைத் தாண்டி, லிங்கா பற்றி பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

லிங்கா திருட்டு விசிடி விற்போர் மற்றும் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top