0
 கண்ணெதிரே பட்டாலும் நொடிநேரம் கூட கவனிக்காமல் கடந்து போய்விடுகிறோம் இம்மனிதர்களை. நகரங்களில் விளிம்பு நிலையில் வாடும் மனிதர்களை நெருங்கிப் படம் பிடித்துக் காட்டுகிறது, இந்தப் பாடலின் காட்சிகள். | இணைப்பு கீழே |

இந்தப் பாடலையும், அது படமாக்கப்பட்ட விதத்தையும், மனிதர்களின் இயல்பைக் காட்டும் உத்தியையும் கவனித்தாலே புரிந்துவிடும், இது இயக்குநர் மிஷ்கினின் சினிமா மொழி என்று.

கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் பாடல் வரிகள், தமிழின் எளிய சொற்களுக்கும் மனத்தைக் குத்திக் கிழிக்கும் வல்லமை உண்டு என நிரூபிப்பவை. இளம் இசையமைப்பாளர் ஆரோள், வயலின் மூலம் உள்ளத்தை மருகவைக்கிறது. உத்ராவில் குரல் உருகவைக்கிறது.

பி.சி.ஸ்ரீராமின் மாணவர் வைட் ஆங்கிள் ரவிசங்கரனின் கேமரா, பாடல் வரிகளையும் இசையையும் ஒருங்கிணைத்த வசீகரமான காட்சிக் கவிதைக்கு வித்திட்டுள்ளது.

வயலின் மீட்டும் நாகா, பாடும் அந்தச் சிறுமி, சுரங்கப் பாதையில் உட்கார்ந்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், பொம்மை விற்கும் நபர், பலூன் மாமா, சோர்வில் துவண்டிருக்கும் 'பர்ஸ்' விற்பனையாளர், பிச்சையிட முன்வரும் மிகச் சிலர்... தன் கண் எதிரே நிறைந்திருக்கும் இவர்கள் எவரையும் கண்டுகொள்ள நேரமின்றி கடக்கும் நகர வாழ்க்கையில் நடக்கும் மக்கள்.

மொத்தத்தில், நிஜமாகவே மிஷ்கின் ஒரு சினிமா 'பிசாசு' என்பதை உறுதி செய்கிறது, 'நதி போகும் கூழாங்கல் பயணம்' எனத் தொடங்கும் இப்பாடல்.

Post a Comment

 
Top