0
 ராகுல் காந்தியின் அத்தியாயம் முடிந்து விட்டதாக யாரும் கருதக் கூடாது. அவருக்கு இன்னும் அவகாசம் தர வேண்டும். பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

மேலும் ரஜினியை அரசியலுக்கு இழுக்க நடக்கும் முயற்சிகள் குறித்து அவர் கூறுகையில், எனக்கு ரஜினியைப் பற்றி அவ்வளவாக தெரியாது. கமல்ஹாசன் குறித்துத்தான் நன்றாக தெரியும் என்றும் அவர் பதிலளித்துள்ளார். திமுகவின் முக்கிய முகமாக வளைய வந்த குஷ்பு சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் காங்கிரஸுக்கு வந்திருப்பது தமிழக காங்கிரஸுக்கு ஒரு புதுத் தெம்பைக் கொடுத்துள்ளது.
ஜி.கே.வாசன் வெளியேறிய அதே வேகத்தில் குஷ்பு வந்திருப்பதால் காங்கிரஸ் பலம் பெறும் என்ற நம்பிக்கை அக்கட்சியில் நிலவுகிறது. இந்த நிலையில் டெக்கான் குரோனிக்கிள் இதழுக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார் குஷ்பு. அதில் ராகுல் காந்தி முதல் உள்ளூர் காங்கிரஸ் வரை பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார் குஷ்பு.

பேட்டியிலிருந்து:
இதுவரை திமுகவின் முகமாக இருந்து வந்தீர்கள். திமுகவுக்காக தீவிரமாக பிரசாரமும் செய்தீர்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமாகவும் இருந்தீர்கள். இப்போது ஏன் திமுகவை விட்டு விலகினீர்கள்? நான் அப்போதும் காரணம் குறித்துப் பேசவில்லை. இப்போதும் பேசமாட்டேன். எப்போதும் பேச மாட்டேன். காரணம் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆனால் நான் அதைச் சொல்ல மாட்டேன். திமுக தலைவர் மீதும், திமுக மீதும் நான் மரியாதை வைத்துள்ளேன். எப்போதுமே கலைஞர் குறித்தும், திமுக குறித்தும் நான் அவமரியாதையாக பேச மாட்டேன்.
காங்கிரஸை ஏன் தேர்வு செய்தீர்கள்?
காங்கிரஸின் கொள்கை, கோட்பாடுகளைப் பார்த்து வளர்ந்தவள் நான். மும்பையில் எனது மொத்தக் குடும்பமும் காங்கிரஸுக்காக ஓட்டுப் போட்டு வரும் குடும்பம். நான் 16 வயது வரை மும்பையில்தான் வளர்ந்தேன். மதச்சார்பற்ற நடுத்தர வர்க்க குடும்பம்தான் எனது குடும்பம். அரசு வீட்டில் குடியிருந்த குடும்பம்தான் எனது குடும்பம். பல மத மக்களுடன் இணைந்து வாழ்ந்தது எனது குடும்பம். அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.. மதச்சார்பின்மையில் நான் முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறேன். காங்கிரஸாஸ்தான் அது முடியும். நாட்டுக்கு எந்த வண்ணமும் கொடுக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
மோடி அரசால் இந்த மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்று உணர்கிறீர்களா?
நான் பயந்து போய்த்தான் இருக்கிறேன். யாரைப் பார்த்தாலும் காவி மயம், இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ் என்றுதான் பேசுகிறார்கள். ஆனால் எனது இந்தியாவின் நிறம் காவியாக இருப்பதை நான் விரும்பவில்லை. நான் பிரதமர் மோடி சரியாக ஆட்சி செய்யவில்லை என்றும் கூற மாட்டேன்.
அவர் நல்ல தலைவர் இல்லை என்றும் கூற மாட்டேன். அடுத்த நான்கரை ஆண்டுகள் நாம் பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் கடந்த ஆறு மாதங்களில் அவர் எதுவும் செய்யவில்லை. அவரது வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. சமஸ்கிருதத்தை அவர்கள் மக்கள் மீது திணிக்கிறார்கள்.
நீங்கள் திருமணத்திற்குப் பிறகும் முஸ்லீமாக இருப்பதாக கூறுகிறீர்கள். பிறகு எப்படி நாத்திக கட்சியான திமுகவில் தொடர்ந்தீர்கள்…
திமுக நாத்திக கட்சி அல்ல. அல்லாதான் பெரியவர், இயேசுநாதர்தான் பெரியவர், கணேசர்தான் பெரியவர் என்று நான் சொன்னதில்லை. என்னை மீறிய சூப்பர் பவர் என்னை இயக்குகிறது என்று நான் சொல்ல மாட்டேன்.
நீங்கள் உயர வேண்டுமானால் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வீட்டோடு உங்களது மதத்தையும், நம்பிக்கைகளையும் விட்டு விட வேண்டும். தெருவுக்கு வந்து விட்டால் நீங்கள் இந்துவும் அல்ல, முஸ்லீமும் அல்ல, கிறிஸ்தவரும் அல்ல.. நீங்கள் ஒரு இந்தியர்.
காங்கிரஸிடம் என்ன குறை உள்ளது. ஏன் அக்கட்சி சரிந்து போனது?
இப்போதுதான் நான் காங்கிரஸில் சேர்ந்துள்ளேன். எனவே இதுகுறித்துப் பேச நான் பொருத்தமான ஆள் கிடையாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் முக்கியப் பங்கு வகித்தது. மக்கள் 2ஜி ஊழலையும், நிலக்கரி ஊழலையும்தான் பெரிதாக பார்த்தார்கள். காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளில் செய்ததை மறந்து விட்டார்கள்.
பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், கல்வி, சுகாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி ஆகியவற்றை பார்க்கவில்லை. மக்களுக்கு ஞாபக மறதி அதிகரித்து விட்டது.
நேரு, இந்திர காந்தி பிறந்த நாள், நினைவு நாள் விழாக்களை தகர்க்க மோடி அரசு சதி செய்வதாக கருதுகிறீர்களா?
இதற்கு பாஜக அல்லது மோடிதான் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவதற்கு மறக்கவில்லை.
ஆனால் நவம்பர் 14ம் தேதியை மறந்து விட்டார்கள். நேரு பிறந்த நாள் அவர்களுக்கு நினைவுக்கு வரவில்லை.

வாரிசு அரசியல் குறித்து என்ன கருதுகிறீர்கள்?
அதை வாரிசு அரசியல் என்று நான் சொல்ல மாட்டேன். நேரு பிரதமராக இருந்தபோது இந்திரா காந்தி அரசியலில்ஆர்வம் காட்டினார். ஒரு தலைவராக தன்னை உயர்த்திக் கொண்டார். அது அவரது உரிமை. மேலும் அவரது தலைவர்கள் இந்திராவை அங்கீகரித்தார்கள். ராஜீவ் காந்தி சந்தோஷமாக விமானியாக இருந்து வந்தார்.
அவரது தாயார் படுகொலை செய்யப்பட்டதும் அவர் மீது பொறுப்பு வந்தது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, சோனியா காந்தியோ அல்லது ராகுல் காந்தியோ அரசியலில் இல்லை. சோனியா காந்தி இல்லத்தரசியாக வீட்டில் நிம்மதியாக இருந்து வந்தார். அவர் மீதும் பொறுப்பு சுமத்தப்பட்டது.
ராகுல் காந்தியைப் பொறுத்தவரை அவரது தாயாருக்கு உதவியாக இருக்கிறார். அவரது தாயாரின் உடல் நலம் சரியில்லை. எனவே அவர் உதவியாக இருக்கிறார். தாயார் அவுசகரியகமாக இருக்கும்போது உதவி புரிவது பிள்ளைகளின் கடமையாகும்.
ஏன் இந்தக் குடும்பம் மட்டும் காங்கிரஸில் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும்?

காங்கிரஸில் வேறு புத்திசாலித் தலைவர்களே இல்லையா? இது சர்வாதிகாரம் அல்ல. வாரிசு அரசியல் அல்ல. இங்கு சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ முடிவெடுப்பதில்லை. கட்சிதான் முடிவெடுக்கிறது. கட்சிதான் முடிவெடுக்கிறது. ஒருவர் மட்டுமே முடிவெடுத்தால்தான அது சர்வாதிகாரம். காங்கிரஸ் சர்வாதிகார கட்சி அல்ல.
இது ராகுல் காந்தியின் காங்கிரஸுக்கும் பொருந்துமா? ராகுல் காந்தி இல்லாமல் வேறு யாரேனும் காங்கிரஸுக்குத் தலைமை தாங்க முடியாதா?
நான் சர்ச்சைகளுக்குள் போக விரும்பவில்லை. எந்தக் கட்சியிலும் கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும். திமுக தோற்றுவிக்கப்பட்டபோது, கலைஞர் 70 ஆண்டுகளுக்கு கட்சி்த் தலைவராக இருப்பார் என்று யாராவது நினைத்திருப்பார்களா.. அதேபோல சோனியா கட்சித் தலைவரானபோது அவரது கட்சி 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்று யாராவது நினைத்தார்களா.

ஆனால் ராகுல் காந்தி தோற்று விட்டாரே?
ராகுல் காந்திக்கு முற்றுப் புள்ளி வைத்து விடாதீர்கள். அவருக்கு அவகாசம் கொடுங்கள். நன்கு படித்தவர் ராகுல் காந்தி. வானை வளைப்பேன், நட்சத்திரத்தைக் கொண்டு வருவேன் என்று பொய்யாகப் பேசத் தெரியாதவர் அவர். மக்களைக் கவரும் வகையில் பேசத் தெரியாதவர். ஆனால் தெளிவான சிந்தனை கொண்டவர் ராகுல். நம்பிக்கை இருந்தால்தான் அவர் பேசுவார். பொய்யாக பேச மாட்டார்.

தமிழகத்தில் பாஜகவினர் ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயற்சிக்கிறார்களே. இது குறித்து என்ன சொல்கிறீர்கள்?
எனக்கு ரஜினியை அந்த அளவுக்குத் தெரியாது. கமல்ஹாசனைத்தான் நன்றாகத் தெரியும்.
அதிமுக அரசு எப்படி இருக்கிறது?
ஒன்றுமே நடக்கவில்லை. சாலைகள் மகா மோசமாக உள்ளன. திட்டங்கள் பாதியிலேயே நிற்கின்றன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மின்சாரம் இல்லை. வேலைவாய்ப்புகள் இல்லை. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. தமிழகவாசியாக, நான் பெரும் ஏமாற்றமடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார் குஷ்பு.

Post a Comment

 
Top