Friday, 19 December 2014

அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் சேருகிறார் கங்கை அமரன்

இசையமைப்பாளர்- இயக்குநர்- பாடலாசிரியர் கங்கை அமரன் நாளை அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது பாஜக.தமிழக சினிமா மற்றும் பிற கட்சியின் பிரபலங்களுக்கு அக்கட்சி வலைவீசி வருகிறது.

திராவிட கட்சிகளில் உள்ள தலைவர்கள், பிரபலங்களை தங்கள் கட்சிக்கு இழுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நாளை சென்னைக்கு வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா.

அவரது முன்னிலையில் விஐபிக்கள் சிலர் பாஜகவில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. பிரபல இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணையவிருக்கிறார்.

அவருடன் மேலும் சில சினிமா பிரபலங்களும் இணையக்கூடும் என்கிறார்கள்.

ஐ படத்துக்கு யு/ஏ சான்று! ஜனவரி 9ல் வெளியீடு

 இந்த வருடம் அனைவரின் கவனமும் ஐ படத்தின் மீதுதான் உள்ளது.

விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி மற்றும் பலர் நடிக்க ஷங்கர் இயக்கியுள்ள படம் ஐ. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம் 40 கிலோ கொண்ட ஒல்லிப் பிச்சானாகவும், 110 கிலோ எடை கொண்ட மாமிச மலையாகவும், "அந்நியன்' ரெமோ டைப்பிலான லவ்வர் பாயாகவும் நடித்திருக்கிறார். இதுதவிர நான்கு கெட் அப்கள் வேறு இருக்கிறது.

படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதனிடையே ஐ படம் தணிக்கைக் குழு சான்றிதழுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் ஐ படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

பொதுவாக ஒரு படத்திற்கு யு சான்று கிடைத்தால் மட்டுமே அரசின் வரி விலக்கு பெற இயலும். ஆனால் இப்போது ஐ படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளதால் வரி விலக்கு பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஐ படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் படக்குழுவினர் இறங்குவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.

ஜெயலலிதா படத்தை மடியில் வைத்திருந்த பன்னீர்செல்வம் - குஷ்பு

 
 டெல்லியில் நடந்த முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனது மடியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததாக நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

ஒரு காங்கிரஸ் நடிகையாக, விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட குஷ்பு இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்:
நான் 1987-ல் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். பிறகு, தமிழகத்தின் மருமகளானேன். என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்பதற்காக அரசியலில் இறங்கினேன். நான் கட்சி மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை.

நான் சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து குடும்பத்தை செட்டில் செய்து விட்டுத்தான் கட்சியில் சேர்ந்தேன். சிலரைப்போல் அரசியலில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை நடத்த கட்சியில் சேரவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ்தான். பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும் உரிமை, காங்கிரஸ் கட்சியைத் தவிர, வேறு யாருக்கு இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரத்துக்காகப் போராடினார். விடுதலைக்குப் பிறகு தமிழக முதல்வர் ஆனார். ஆனால், இப்போது நிலைமை என்ன, முதலில் முதல்வர் ஆகிறார்கள். பிறகு சேல்ஸ்மேனாகி விடுகின்றனர்.

பா ஜ க மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது. மோடிமஸ்தான் வேலையை காட்டி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஹேப்பி பர்த்டே சொல்கிறார். இன்னும் நரேந்திர மோடியும், ராஜபக்சேவும் ரம்மி விளையாடாததுதான் பாக்கி.
சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் மீட்டிங் நடந்தது. தமிழகத்தில் இருந்து சென்றவர் மீட்டிங்கில் அவரது கட்சித் தலைவர் போட்டோவை மடியில் வைத்து உட்கார்ந்து கொண்டு இருந்தாராம். இந்தக் கொடுமை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது என்று கூறியுள்ளார்.