Thursday, 18 December 2014

கே.பாலச்சந்தர் இறந்துவிட்டதாக ட்வீட் போட்டு மன்னிப்பு கேட்ட ராம் கோபால் வர்மா!!!

இயக்குனர் கே. பாலச்சந்தர் இறந்துவிட்டார் என்று தவறாக ட்வீட் செய்ததற்காக இயக்குனர் ராம் கோபால் வர்மா மன்னிப்பு கேட்டுள்ளார்.

இயக்குனர் கே. பாலச்சந்தர் உடல்நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெற்று வரும் அவர் நலமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறுகையில், இந்திய சினிமாவின் அருமையான இயக்குனர் கே. பாலச்சந்தரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

அதன் பிறகு பாலச்சந்தர் உயிருடன் இருக்கும் செய்தியை அறிந்த அவர் அந்த ட்வீட்டை அவசரமாக அழித்துவிட்டு புதிதாக ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,

பாலச்சந்தர் இறந்துவிட்டார் என்ற வதந்தியை நம்பி ட்வீட் செய்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

"நாய்" தந்த நம்பிக்கையில் சிபிராஜ் எடுத்த புதிய முடிவு!

 சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நாய்கள் ஜாக்கிரதை' படம் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தில் நடித்திருந்த நாயும் அனைவரின் பாரத்தையும் பெற்றது.

பல வருடங்களாக படம் நடிக்காமல் வீட்டிலேயே இருந்த சிபிராஜ் இந்த வெற்றியின் மூலம் உற்சாகமடைந்துள்ளார்.

வேறு படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தபோதும், அதையெல்லாம் மறுத்துவிட்டு இப்போது, 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் இறங்கியுள்ளாராம்.
முதல் பாகத்தை இயக்கிய இயக்குனரே இந்த படத்தையும் இயக்கவுள்ளார்.

நாளை வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

லிங்காவின் அமர்க்களம் அடங்கத் தொடங்கியிருப்பதால் நாளை நான்குப் படங்கள் வெளியாகின்றன.

முதலில் மிஷ்கினின் பிசாசு. கலை, கலைஞன் என்றெல்லாம் மூச்சுமுட்ட பேசும் மிஷ்கின் பிசாசு படத்தின் விளம்பரங்களில் தனது பெயரையும் பாலாவின் பெயரையும் மட்டுமே குறிப்பிட்டு மற்ற கலைஞர்களை இருட்டடிப்பு செய்துள்ளார். படத்தை வெளியிடும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் மறைந்த ராம.நாராயணன் மற்றும் அவரது மனைவி பெயர்கூட விளம்பரங்களில் உள்ளது. ஆனால் ஒளிப்பதிவு செய்தவர், இசையமைத்தவர், எடிட்டிங் செய்தவர் என்று யாருடைய பெயரும் இல்லை. மிஷ்கினின் இந்த அகம்பாவ இருட்டடிப்புக்கு முதலில் நம் கண்டனங்கள்.

பிசாசு படம் குறித்து பேசிய மிஷ்கின், பிசாசு, டாம்பீகமற்ற எளிமையான படம். ஒரு பெண் இறந்து பிசாசாகி விடுகிறாள். கதை எழுதும்போது, நான் பேரலலாக தமிழ்ப் படம், ஆங்கிலப் படம், உலகப் படம், ஹாரர் ஸ்டோரீஸ், கோஸ்ட் கதை எழுத தனியாக ஸ்க்ரீன்-ப்ளே புக்ஸ் படிச்சேன். அதிலிருந்து விலகி, நான் ஸ்க்ரிப்ட் எழிதியிருக்கேன். படம் தமிழ் சார்ந்து, உறவு சார்ந்து இருக்கும்” என்றார்.

பிரயாகா ஹீரோயின். படத்தில் பிசாசாக வருகிறவர் இவரே. நாயகன் பெயர் நாகா. தமிழச்சி தங்கபாண்டியன் இந்தப் படத்துக்கு பாடல் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு ரவி ராய். இசை அரோல் கொரெலி.

யுஏ சான்றிதழ் பெற்றுள்ள பிசாசு நாளை திரைக்கு வருகிறது.

நாளை வெளியாகும் இன்னொரு படம், ரிச்சர்ட் நடித்துள்ள சுற்றுலா. என்ன மாதிரி கதை? இயக்குனர் ராஜேஷ் ஆல்பர்டிடம் கேட்டோம்.

ஒரே நாளில் நடக்கும் கதை. மலைப் பிரதேசத்தில் ஆடம்பர மாளிகையில் சொகுசாக வாழும் இளைஞன் ஒருவனின் இரு வேறு முகங்களை பரபரவென்று ஓடும் திரைக்கதை மூலம் படமாக்கி இருக்கிறோம்.

ஜானி என்ற கதாப்பாத்திரத்தில் ரிச்சர்ட் நெகடிவ் வேடம் ஏற்றிருக்கிறார்..அவரது கலையுலக அங்கீகாரத்திற்கு அஸ்திவாரம் போடும் படமாக சுற்றுலா இருக்கும்.

முழுக்க முழுக்க ஊட்டியிலேயே படமாக்கி இருக்கிறோம். படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான மாளிகை தினமும் ஒரு லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து படமாக்கினோம்.

அடுத்து என்ன... அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஆங்கிலப் படத்திற்கு நிகரான திரைக்கதை இதில் இருக்கும் என்றார்.

இவை தவிர நாடோடிப் பறவை, நட்பின் நூறாவது நாள் ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன.

அமீர் கானின் பிகே படமும் நாளை திரைக்கு வருகிறது. ராஜ்குமார் ஹிரானியின் இயக்கம் என்பதால் படத்துக்கு இந்தியாவுக்கு வெளியேயும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நாளை வெளியாகும் படங்கள், வரவிருக்கும் மூன்று தினங்களில் லிங்கா வசூலிப்பதில் சின்ன சதவீதத்தை பெற முடிந்தாலே அது பெரிய விஷயம்தான்.

லிங்காவில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன... இப்போ வேகமா இருக்கா படம்?

லிங்கா படத்திலிருந்து 10 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டதை நேற்றே கூறியிருந்தோம். நீளம் குறைக்கப்பட்ட லிங்காவை நேற்று முதல் பார்க்க முடிந்தது.

படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் மொத்தம் 6. அவை:

1. மரகத நெக்லஸ் திரும்போது, கதவில் அனுஷ்காவை விட்டு மார்க் பண்ண வைக்கும் காட்சி

2. ரஜினியை வரவேற்று லோக்கல் புலவர் ஒருவர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து கவிதைகளைச் சொல்லி பரிசு கேட்கும் காட்சி

3. தன் தோழிகளுடன் சோனாக்ஷி செய்யும் சேட்டை காட்சி

4. டேம் ப்ளான் பேப்பரில் சோனாக்ஷி காப்பியைக் கொட்டிவிடும் காட்சி

5. ராஜா லிங்கேஸ்வரன் பிறந்த நாளுக்கு விருந்தினர்கள் வரும் நீண்ட காட்சி

6. க்ளைமாக்ஸ் பலூன் காட்சியில் ஒரு பகுதி மொத்தம் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

படத்தின் நீளத்தை குறைப்பது பற்றி பட வெளியிட்டுக்கு முன்பே ரஜினி பேசினாராம். ஆனால் 4 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் வந்திருப்பதால் ரசிகர்களுக்கு சலிக்காது, எதையும் குறைக்கத் தேவையில்லை என்று ரவிக்குமார் உள்ளிட்டோர் கருதியதால் அப்படியே விட்டிருக்கிறார்கள்.

இப்போது படத்தைக் குறை சொல்வோர் பிரதானமாகச் சொல்வதே, அதன் நீளத்தைத்தான். எனவே நீளத்தையும்,

க்ளைமாக்ஸின் ஒரு பகுதியையும் ட்ரிம் செய்துள்ளனர். இப்போது படம் முன்பை விட வேகமாக இருகிறது என்பது இப்போது பார்த்தவர்களின் கருத்தாக உள்ளது!

ரஜினி ரசிகர்கள் ஒவ்வொருவரையும் நாங்கள் கவுரவிக்க காத்து இருக்கிறோம்...?.

 லிங்கா வெளியான இரண்டாவது நாளே திருட்டு டிவிடிகள் வலம்வர ஆரம்பித்தன. ஆந்திர போலீஸார் ஒரே நபரிடமிருந்து 3000 லிங்கா திருட்டு டிவிடிகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த செய்தியால் லிங்கா யூனிட் அலார்ட் ஆகியுள்ளது. சென்னை பர்மா பஜாரிலும் லிங்கா திருட்டு டிவிடி விற்கப்படுகிறது. ஒரு டிவிடியின் விலை 100 ரூபாய்.

திருட்டு சி.டி.யை தடுக்கும்படி ரஜினி ரசிகர்களுக்கு லிங்கா படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் படத்தை வாங்கி வெளியிடும் ஈராஸ் இன்டர்ஷேனல் வேந்தர் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் உரிமம் பெறாத திருட்டு சி.டி.க்கள் தமிழகமெங்கும் சட்ட விரோதமாக வினியோகம் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

சூப்பர் ஸ்டாரின் ரசிக கண்மணிகளாகிய நீங்கள் அவ்வாறு வினியோகம் செய்பவர்களை கண்டுபிடித்து காவல் துறையில் புகார் செய்து ஒப்படைக்குமாறு சட்டப்படி நடவடிக்கை எடுத்து லிங்கா திரைப்படத்தின் வெற்றிக்கு உதவுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஒத்துழைப்பு தரும் ஒவ்வொருவரையும் நாங்கள் கவுரவிக்க காத்து இருக்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.

இதுதான் விஜய் - சிம்புதேவன் படத்தின் - ’மறு தீரன்’

 கத்தி படத்திற்கு பிறகு விஜய், சிம்பு தேவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இப்படத்திற்கு கருடா, மதீசன் என்று பெயர் வைத்திருப்பதாக வதந்திகள் வந்திருந்தது. தற்போது இப்படத்திற்கு ’மறு தீரன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ஆனால் இப்பெயரும் உறுதியா என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

விஜயின் உண்மையான முகம் :சொந்த தாய்மாமனை வறுமையில் தவிக்க விட்டவர்! - பேஸ்புக்கில் வெளுக்கும் வேலு பிரபாகரன்

இயக்குநர் வேலு பிரபாகரன்.. நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன், உள்ளிட்ட பல படங்களைத் தந்தவர். தனது பேஸ்புக் பக்கத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்த முதல்வராகக் காய் நகர்த்தும் விஜய், தன் சொந்த தாய்மாமன் வறுமையில் வாடுவதைக் கண்டு கொள்ளாத சிறு மனம் படைத்தவர் என்று கடுமையான மொழியில் விமர்சித்துள்ளார்.


இதுகுறித்து வேலு பிரபாகரன் எழுதியிருப்பதாவது:

"என்னுடன் இருப்பவர் நடிகர் விஜய் அவர்களின் தாய் மாமன்.. தாயார் ஷோபா அவர்களின் அண்ணன...சுரேந்தர். இவரை ஒரு பழைய ஸ்கூட்டி ஓட்டியபடி வடபழனி ஏரியாவில் அடிக்கடி பார்ககலாம் மிக மிக சாதாரண வாழ்க்கை வாழும் அவரது நிலை எங்களை போன்ற சினிமாக்காரர்களுக்கே அதிர்ச்சியும், வேதனையும் தரும். இருவருக்கும் சரியான உறவில்லை என்று நெருங்கியவர்களுக்கு தெரியும், இருந்தாலும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற நோக்கத்தில் திட்டங்கள் தீட்டி காய்களை நகர்த்தும் ஒருவர்.

அதுவும் பல கோடிகளை ஊதியமாகப் பெரும் ஒருவர், எவ்வளவு மனக்கசப்பு இருந்தாலும் பரந்த மனப்பான்மையோடு தன் மாமன் நிலையை உயர்த்த மனமில்லாதவர்.. பல கோடிகள் புரளும் போதும் தன் இரத்த சொந்தம்... ஏழ்மையில் சிக்கியிருப்பதைக் கண்டும் உதவாத சிறு மனம் படைத்த, மனிதாபிமானமற்ற இதயமில்லாதவர்.. அரசியலுக்கு வந்து மக்களுக்கு என்ன செய்வார்?" -இவ்வாறு அவர் எழுதியுள்ளார். அதன் ஸ்கிரீன்ஷாட்டை இணைத்துள்ளோம். (வேலு பிரபாகரன் விஜய்யை ஒருமையில் எழுதியுள்ளார்)


குறிப்பு: எஸ் என் சுரேந்தர் பிரபலமான பிண்ணனிப் பாடகர். தேவன் கோயில் தீபம் ஒன்று.. போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்கள் பாடியவர். சென்னை 28 படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலிருந்து நடிகர் மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் இவர்தான். ஆரம்ப நாட்களில் விஜய்க்கு மிக நெருக்கமானவராக இருந்தார்.